Mar 23, 2017

நபித்தோழர்களும் நமது நிலையும்

நபித்தோழர்களும் நமது நிலையும்

குர்ஆன், சுன்னாவை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேடை தோறும் முழங்கியவர்கள் நபித்தோழர்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் காட்டியதன் மூலம் நாம் ஏற்கனவே இருந்த நிலைபாட்டிலிருந்து மாறி விட்டதாக முபாஹலா ஓர் ஆய்வு என்ற பிரசுரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

நபித்தோழர்களைப் பற்றி நாம் அன்று கொண்ட அதே மதிப்பீட்டிலும் மரியாதையிலும் ஒரே மாதிரியான நிலைபாட்டில் தான் நாம் இருக்கின்றோம். ஆனால் இவ்வாறு நம்மைக் குற்றம் சாட்டுபவர்கள் தான் தங்களுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அவர்கள் இதுவரை கொண்டிருந்த நிலைபாட்டிற்கு மாற்றமாக அல்ஜன்னத் என்ற பத்திரிகை அக்டோபர் 2004 இதழில் பக்கம்15ல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் கீழ்க்கண்ட விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

1. நபிமார்களுக்குப் பிறகு ஸஹாபாக்களான நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் ஹதீஸில் உள்ளன.


2. நபித்தோழர்களை அல்லாஹ் திருப்திப் பட்டுக் கொண்டதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.


3. அல்லாஹ் விரும்பியது போன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினாலேயே அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்துள்ளான்.


4. நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுடைய ஈமானை விடச் சிறந்ததாகும்.


5. நபித்தோழர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர்.


6. நபித்தோழர்களை சங்கைப்படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.


7 ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


8. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.


9. ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும்.


10. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும்.


11. குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை.


இதுதான் அந்த அறிக்கை விபரம்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 3673

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி),

நூல்: புகாரி 2651

அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (9:117)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள்.

(57:10)


இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.

ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடம் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.

நபித்தோழர்கள் குறித்து இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள கட்டளைகளைப் பார்த்தால் இவர்கள் சரியான நிலைபாட்டில் இருப்பது போல் தோன்றும். பத்தாவது கட்டளையைப் ஆழமாகச் சிந்தித்தால் விபரீதம் புரியும். ஆனால் இறுதியாக உள்ள பதினோறாவது கட்டளை தான் இவர்களின் கொள்கை மாற்றத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.

இவர்கள் எந்த அளவிற்குத் தடம் புரண்டு விட்டனர் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

நபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்தவொரு கருத்தையும் கூறியதில்லை என்பது அவர்களின் பதினோறாவது கட்டளை. இதன் மூலம் நபித்தோழர்கள் கூறிய, செய்த அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு இவர்கள் மாறி விட்டனர். நபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக எந்தவொன்றையும் கூறியதில்லை என்றால் அவை அனைத்துமே பின்பற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து இருக்க முடியாது. குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் என மூன்று ஆதாரங்களை இப்போது ஏற்படுத்திக் கொண்டார்கள்.

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மையாகும்.

தமத்துஃ ஹஜ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.

நான் உஸ்மான் (ர-) உடனும், அலீ (ர-) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ர-) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ர-) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்-ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்,

நூல் : புகாரி 1563

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ர-) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ர-), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார். அப்போது இப்னு உமர் (ர-), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்,

நூல் : திர்மிதீ (753)

குளிப்பு எப்போது கடமை?

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன். அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி),

நூல் : புகாரி 293

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 526, திர்மிதீ 102

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கு, அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டு, தொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி), நூல்: 179, 292

குளிப்புக்காக தயம்மம்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)யிடம், "அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். "தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), "நபி (ஸல்) அவர்கள், "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?'' என்று கேட்டார். அதற்கு, "(இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.

"அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். "தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்கு, "இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள்'' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.


அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா, நூல்: 346, 347

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

கொள்ளை நோய்

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5279

கொள்ளை நோய் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியது உமர் (ரலி)க்கும், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

முதலில் மரணிப்பவர்

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "உங்களது மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் கை நீளமானவர் தான்'' என்று கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகு தான் கை நீளமானவர் என்பது, அதிக தர்மம் செய்பவரைக் குறிக்கின்றது என்பதை நாங்கள் அறிந்தோம். (ஸைனப்) அதிக தர்மம் செய்பவராக இருந்ததால் தான் முதலில் நபி (ஸல்) அவர்களை அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1420

கை நீளமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் அதிக தர்மம் செய்பவர் என்பதை விளங்காமல் கையின் அளவை அளந்து பார்த்துள்ளனர்.

கருப்புக் கயிறு

"கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (2:187) இறை வசனம் இறங்கிய போது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும், வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக் கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை. விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(கருப்புக் கயிறு என்பது) இரவின் கருமையையும், (வெள்ளைக் கயிறு என்பது) விடியலின் வெண்மையும் தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூல்: புகாரி 1916,1917

கருப்புக் கயிறு என்பது இரவையும், வெள்ளைக் கயிறு என்பது விடியலையும் குறிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உண்மையில் கருப்புக் கயிறையும் வெள்ளைக் கயிறையும் இந்த நபித்தோழர் வைத்துப் பார்த்துள்ளார்.

அனுமதி கோருதல்

உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), "அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்'' என்றார்கள். "அவர் திரும்பிச் சென்று விட்டார்'' என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி), அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.

உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், "நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)யை உமர் (ரலி)யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதா? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா,

நூல்: புகாரி 2062, 6245

வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி தமக்குத் தெரியாமல் ஆகி விட்டது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

நபிகள் நாயகத்தின் மரணம்

(நபி-ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) உட்கார மறுத்ததும், மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே, அபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.

அப்போது அபூபக்ர் (ரலி), "உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக, அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1242,3670

நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர்.

முத்தலாக்

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ர-) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ர-) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ர-) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் 2689

முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.

இந்தச் செய்திகள் அனைத்தும், நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, "நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், "என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், "நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 4740, 6524

நபித்தோழர்கள் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக எதையும் கூறியதில்லை என்ற வாதம் தவறானது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் மார்க்த்தின் ஆதாரங்களாகப் பின்பற்ற வேண்டும் என்று இதுவரை கூறி வந்தவர்கள் இப்போது ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்குச் சென்று விட்டனர். மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்தச் செய்திகள் அனைத்தும் நாம் புதிதாகக் கண்டுபிடித்த செய்திகள் இல்லை. இதுவரை அவர்களும் இதே கருத்தில் தான் இருந்தனர். ஆனால் இப்போது என்ன நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை.

இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறோம்.

மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஹாகிம் 318

குர்ஆன், நபிவழி ஆகிய இரண்டையும் பின்பற்றும் வரை நாம் வழிதவற மாட்டோம். ஆனால் மூன்றாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தால், அதுதான் வழிகேட்டின் துவக்கமாகும். அந்த ஒரு வாசலைத் திறந்து விட்டால், நபித்தோழர்கள் தானே என்று சிந்திக்கத் துவங்கினால் இஸ்லாத்தின் அது அடிப்படைக்கே மாற்றமாகத் தான் போய் முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தச் சமுதாயத்தில் இன்று நிலவும் அத்தனை பித்அத்துக்களுக்கும், வழிகேடுகளுக்கும் காரணம் குர்ஆன், நபிவழி ஆகிய இரண்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் வேறு வழிகளைத் தேர்ந்தெடுத்தது தான் என்பதை இங்கே நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியைக் காட்டுவானாக!

தவணைத் திருமணம்

கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முத்அத்துனிஸா (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி), நூல்: புகாரி 4216, 5115, 5523, 6961

இந்த ஹதீஸ் முத்ஆ எனும் தவணைத் திருமணத்தைத் தடை செய்திருந்தாலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முத்ஆ திருமணம் அனுமதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.

அல்முத்ஆ (தவணை முறை) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர், நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில் தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), ஆம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான்,

நூல்: புகாரி 5116

தமத்துஃ (2:196) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. ஒருவர் மட்டும் தாம் விரும்பியதை தமது அபிப்ராயப்படி தெரிவித்தார்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி), நூல்: புகாரி 4518

EGATHUVAM NOV 2004