Mar 23, 2017

சந்தர்ப்பவாதக் கூட்டணிகள்

சந்தர்ப்பவாதக் கூட்டணிகள்

சுதந்திர இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. சமுதாய நலனுக்காக போராடக் கூடிய ஓரமைப்பு இன்றியமையாத ஒன்று, காலத்தின் கட்டாயம் என்று உணரப்பட்ட நேரம் அது. அதனால் ஏகத்துவக் கொள்கையுடையவர்கள் கூட தவ்ஹீது சிந்தனையை அடிப்படையாகக் கொள்ளாத அமைப்புகளில் ஐக்கியமாயினர்.

கொள்கைக்காக ஓரமைப்பு, சமுதாயப் பிரச்சனைக்காக இன்னொரு அமைப்பு என்று கொள்கைச் சகோதரர்கள் கூடாரம் மாறும் நிலை அப்போதிருந்தது. இத்தகைய போக்கைத் தடுக்கும் விதமாக சமுதாயப் பிரச்சனையை நாம் கையில் எடுப்போம் என அன்று நாமிருந்த அந்தக் கொள்கை அமைப்பின் தலைமையிடம் நாம் கூறினோம். ஆனால் அன்று அந்தக் கருத்து அந்தத் தலைமையால் சுத்தமாக மறுக்கப்பட்டு விட்டது.

அதனால் சமுதாயப் பிரச்சனைக்காக இன்னொரு அமைப்பைத் துவக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். நம்முடைய இந்தச் செயல்பாட்டை அந்தக் கொள்கைக்காரர்கள் ஜீரணிக்கவில்லை. கொடிகள், கோஷங்கள், கட்சிகள், கழகங்கள் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்று நம்மைக் கடுமையாகச் சாடினர்.

இவர்கள் குராபிகளுடன் (தவறான வழியில் செல்வோருடன்) சங்கமமாகி விட்டனர், குராபிகளுக்காக கொள்கையில் சமரசம் செய்து விட்டனர், கொள்கையைக் கண்ட கிரயத்திற்கு விற்று விட்டனர் என்று நம்மை விளாசித் தள்ளினர்.

அப்போது நாம் அவர்களுக்குச் சொன்ன ஒரே பதில், நாங்கள் துவக்கிய இந்த அமைப்பு என்றைக்கு ஏகத்துவத்திற்கு எதிராகக் கிளம்புகின்றதோ அன்றைக்கு இந்த அமைப்பில் இருக்க மாட்டோம் என்பது தான்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் நாமே துவங்கிய அந்த அமைப்பு மக்கள் கூட்டத்தைக் கண்டதும் மயக்க நிலைக்கு ஆளானது. மக்கள் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஏகத்துவக் கொள்கை ஒரு தடைக் கல்லாக வந்து நிற்கக் கூடாது, அதன் சாயல் கூட நம்மீது படியக் கூடாது என்று முடிவெடுத்து ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கும் காரியத்தில் இறங்கியது.

குராபிகளுடன் (தவறான வழியில் செல்வோருடன்) சகவாசமாக மட்டுமல்ல அவர்களின் சுவாசமாகவே இருக்க விரும்பினர். இப்படி ஒரு எல்லைக்கு இந்த அமைப்பு வந்த பின் இதில் நாம் இருக்கலாகாது என்று கொள்கைக்காக, கொள்கை காக்க நாம் வெளியே வந்ததும், அன்று நம்மை விமர்சித்தவர்கள், விலாசித் தள்ளியவர்கள் இன்று அந்த அமைப்புடன் நட்பு கொள்கின்றனர்.

அன்று நம்மைப் பார்த்து, கொள்கையில் சமரசம் செய்து விட்டதாகச் சாடியவர்கள், இன்று ஏகத்துவத்தை ஒரு தடைக் கல்லாகக் கருதக் கூடியவர்களுடன், ஏகத்துவப் பிரச்சாரத்தை முடக்குவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்களுடன் எப்படி குலாவ முன் வந்தனர்? அவர்கள் அன்று சாடிய அந்தக் கொடிகளும் கோஷங்களும் ஒரு தனி மனிதர் வெளியே வந்ததும் சரியாகி விட்டனவா?

உண்மையில் இவர்கள் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால் இரண்டு பேரை விட்டும் விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் யாரை இவர்கள் விமர்சித்தார்களோ அவர்களுடன் போய் ஒட்டிக் கொள்கின்றார்கள் என்றால் இவர்களிடத்தில் இருப்பது கொள்கை அல்ல. சந்தர்ப்ப வாதம் தான்.

அன்று இவர்கள் கொடி, கோஷத்தை எதிர்த்ததும், கட்சி கழகம் என்று காரி உமிழ்ந்ததும் ஒரு தனி நபரை மையமாகக் கொண்டு தானே தவிர மார்க்கத்தை மையமாகக் கொண்டல்ல என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

தவ்ஹீது பிரச்சாரத்தை முடக்க சதி

பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தி வரும் ஒரு கூட்டத்தினர் நம் மீது கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். இது மாபெரும் அபாண்டமும் அவதூறும் ஆகும்.

எதனால் சுன்னத் வல்ஜமாஅத்தை விட்டு வெளியே வந்தோம்? ஷிர்க் என்ற பாவம் நம்மை நரகத்தில் நிரந்தரமாகக் கொண்டு சென்று விடும் என்று பயந்து தானே இத்தனை எதிர்ப்பலைகளை, எரிமலைகளைக் கடந்து இந்தக் கொள்கையில் இருக்கின்றோம்.

இணை வைப்பவர்களுக்கு சுவனம் தடை செய்யப்பட்டு விட்டதைப் போலவே வட்டி, கொலை போன்ற பாவங்களுக்கும் நிரந்தர நரகம் என்று அல்லாஹ் தெளிவாக அறிவித்துள்ளான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 4:93)

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவை நோக்கிக் கூறுவதைப் பாருங்கள்.

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்கா எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் நாங்கள் அவர்களிடம் சென்றடைந்தோம் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்து விட்டோம். அப்போது அவர், "லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று சொன்னார். ஆகவே அவரை விட்டு அந்த அன்சாரி ஒதுங்கிக் கொண்டார். ஆனால் நான் என் ஈட்டியை அவர் மீது பாய்ச்சி அவரைக் கொன்று விட்டேன். நாங்கள் திரும்பி வந்த போது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "உஸாமாவே, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரைக் கொன்றீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், "அவர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான் (அவ்வாறு கூறினார்)'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரைக் கொன்றீர்கள்?'' என்று திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி),

நூல்: புகாரி 6872, முஸ்லிம் 140

இந்த ஹதீஸ் அடிப்படையில் ஓர் இறை நம்பிக்கையாளனை எப்படி கொல்ல முடியும்? அவ்வாறு கொல்ல வேண்டுமாயின் தன்னை நரகவாதி என்று முடிவு செய்த பின்னர் தான் கொல்ல முடியும். அல்லாஹ் காப்பானாக!

பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்து கொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல் கிந்தீ (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இறை மறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்து விட்டான். பிறகு அவன் என்னை விட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, "அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தேன்' என்று கூறினான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனைக் கொல்லாதே'' என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே, அவன் என் கை ஒன்றைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்'' என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த நிலைக்கு நீ சென்று விடுவாய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார்

நூல்கள்: புகாரி 4019, முஸ்லிம் 139

இந்த ஹதீஸ் ஓர் இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்பவர் காஃபிராக, இறைவனை மறுப்பவராக ஆகி விடுகின்றார் என்று கூறும் போது, இந்தக் கொடிய பாவத்தைச் செய்து குஃப்ர் என்ற நிலையை அடைய நாம் ஒரு போதும் தயாரில்லை. இப்படி ஒரு நிலை ஏற்படுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இன்று கொலை முயற்சி என்று பொய் சொல்லி அப்பாவிகளை, அதாவது கொள்கைப் பிடிப்புள்ளவர்களை சிறையில் அடைத்திருக்கின்றார்கள். இத்துடன் நின்று விடாது ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அழைப்பாளர்களையும் கொலையைத் தூண்டியவர்கள் என்று பொய்ப் புகார் கொடுத்து அவர்களையும் கைது செய்யச் சொல்லி காவல்துறையினரிடம் நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு நேர்வழியின் பக்கம் அழைப்பவருக்கு அந்நேர்வழியைப் பின்பற்றியோரின் கூலிகளைப் போன்ற கூலி (அப்படியே) கிடைக்கும். அது அவர்களுடைய கூலிகளிலிருந்து எதையும் குறைத்து விடாது. ஒரு வழிகேட்டின் பக்கம் அழைப்பவருக்கு அவ்வழிகேட்டைப் பின்பற்றியவரின் பாவம் (அப்படியே) கிடைக்கும். அது அவர்களுடைய பாவத்திலிருந்து எதையும் குறைத்து விடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 4831

இந்த ஹதீஸின்படி கொலை செய்யத் தூண்டியவருக்கு கொலை செய்தவரின் பாவம் அதாவது நிரந்தர நரகம் அப்படியே கிடைக்கும் என்பதால் இதை எந்த ஒரு அழைப்பாளராவது செய்வாரா? ஒரு இறை நம்பிக்கையாளரை கொலை செய்யத் தூண்டுவாரா? நிச்சயமாகச் செய்ய மாட்டார். இது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றார்கள். இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளால் கொள்கை உறுதி மிக்கவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எத்தனை சிறைச்சாலைகளைக் கண்டாலும் இந்தக் கொள்கையை விட்டு ஒருபோதும் அவர்கள் ஓடி விட மாட்டார்கள்.

இவர்கள் இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கொள்கைவாதிகளை உள்ளே தள்ளத் துடிப்பதற்குக் காரணம் இவர்கள் குராபிகள் மீது கொண்டிருக்கும் பாசம் தான். எப்படியேனும் இந்த ஏகத்துவக் கொள்கையை அழித்து விட வேண்டும் என்ற சிந்தனை தான். தாங்களும் ஏகத்துவவாதிகள் என்று இவர்கள் எவ்வளவு தான் நடித்தாலும் அந்த நடிப்பு நாடகத் திரையை வல்ல நாயன் விரைவில் கிழித்து எறிவான்.

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது

(அல்குர்ஆன் 17:83)


என்ற திருமறை வசனத்தின் பொருள் மக்களுக்கு நன்கு தெளிவாக வெளியே வரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தப் பொய்ப் பிரச்சாரக் கூட்டம், நமது கொள்கைச் சகோதரர் ஒருவரை கொலைகாரர், கொள்ளைக்காரர் என்று அழைத்து அவரது திருந்திய நிலையைக் கொச்சைப் படுத்துகின்றது.

ஒருவர் கடந்த கால நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் போது, அவரை மேலும் திருந்துவதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, கொலைகாரர், கொலைகாரர் என்று அழைத்து அவரை பழைய நிலைக்கே திரும்ப வழியனுப்பி வைப்பது மோசமான பாவமாகும். ஒருவர் திருந்தி, தவ்பா செய்த பிறகு அந்தத் தவ்பாவைக் கொச்சைப் படுத்துவது, அல்லாஹ் அவரது பாவத்தை மன்னிக்க மாட்டான் என்ற சித்திரத்தை உருவாக்குவது அல்லாஹ்வுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ரவேலர்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு, "(எனக்கு) பாவமன்னிப்பு கிடைக்குமா?'' என்று விசாரித்தபடி ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், "கிடைக்காது'' என்று கூற அவரையும் அம்மனிதர் கொன்று விட்டார். பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், "இன்ன ஊருக்குப் போ'' என்று கூறினார். (அந்த ஊரை நோக்கிச் சென்ற போது பாதி வழியில்) அவரை மரணம் தழுவியது. அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது இறைக் கருணையைப் பொழியும் வானவர்களும் இறைத் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் சச்சரவு செய்து கொண்டனர். உடனே அல்லாஹ், "நீ நெருங்கி வா'' என்று (அவர் செல்லவிருந்த ஊரிடம்) அதை நோக்கி உத்தரவிட்டான். (அவர் வசித்த ஊரிடம்) "நீ தூரப் போ'' என்று இதை நோக்கி உத்தரவிட்டான். பிறகு "அவ்விரண்டுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறு கணக்கெடுத்த போது) ஒரு சாண் அளவுக்கு அவர் செல்லவிருந்த ஊருக்குச் சமீபமாக இருந்ததால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி),

நூல்: புகாரி 3470

நூறு கொலைகள் செய்தவரைக் கூட, அவர் திருந்தி தவ்பா செய்யும் போது அவரது தவ்பாவை ஏற்று அல்லாஹ் மன்னிக்கத் தயங்கவில்லை என்பதை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

ஆனால் இவர்கள் திருந்திய ஒரு மனிதரைக் கொலைகாரர் என்று திரும்பத் திரும்ப கூறி அல்லாஹ்வின் மன்னிக்கும் அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்கின்றார்கள். இன்று இந்த சகோதரர் பழைய பாதைக்குத் திரும்பிச் செல்லாமல் அவர் ஏற்றுக் கொண்ட குர்ஆனும் ஹதீசும் அவரைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன என்ற தைரியத்தில் இவ்வாறு ஏகடியம் பேசுகின்றார்கள். அல்லாஹ்வின் கருணையால் அவர் தன் பழைய பாதைக்குத் திரும்ப மாட்டார் என்று நாமும் உறுதி கூறுவோம். ஆனால் இவர்களின் இந்த ஆணவப் போக்கை அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான். இவர்களுக்கு அவன் போதுமானவனாக இருக்கின்றான் என்பதை மட்டும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

EGATHUVAM NOV 2004