Oct 26, 2016

உத்தரவின்றி உள்ளே செல்லாதீர்!

உத்தரவின்றி உள்ளே செல்லாதீர்!

எம். ஷம்சுல்லுஹா

இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் நடைமுறை வாழ்க்கைத் திட்டமாகும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய மனிதப் பண்பை கற்றுத் தருகின்றது. அதில் ஒன்று தான், ஒருவர் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும் போது அவர் பேண வேண்டிய பண்பும், வீட்டில் உள்ளவர் தன் வீட்டிற்கு வருபவருக்கு அனுமதியளிக்கும் பண்புமாகும்.

இன்று யாரேனும் ஒரு வீட்டிற்குச் சென்றால் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறாமலேயே உள்ளே நுழைகின்ற அநாகரிகமான நடைமுறையைப் பார்க்கின்றோம். திறந்து கிடக்கும் வீட்டில் மட்டுமல்ல! திரை தொங்கும் வீட்டிலும் திரையை நீக்கிக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றார்கள். இதிலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், பெண்கள் தாங்கள் வழக்கமாக அணியும் ஆடைகளைக் களைந்து விட்டு, படுக்கை ஆடைகளுடன் படுக்கைக்கு ஒதுங்கும் வேளைகளில் கூட அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.

ஓர் இறை நம்பிக்கையாளர் அடுத்தவர் வீட்டுக்குச் செல்லும் போது அடுக்கடுக்கான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது. அதை ஒருவர் அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டும். அவை வருமாறு:

அனுமதி கோரல்

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள். அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)

இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். நான் வாசல் தேடி வந்தேன். உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நின்றவாரே அனுப்பி விட்டார் என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றி குறை கூறிப் பொறுமுவார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கும், பொல்லாப்புக்கும் அவர் இடமளிக்க மாட்டார்.

தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்

வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டு தன் பெயரைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக நான் தான் என்று கூறக் கூடாது.

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், "யாரது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நான் தான் என்றால்...?'' என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 6250

மூன்று முக்கிய நேரங்கள்

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57,58)

இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?

மூன்று முறை அனுமதி கோரல்

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். "நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), "(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்' என்று கூறியுள்ளார்கள்'' என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?'' என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்'' என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245

பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்

ஒருவர் இன்னொருவர் வீட்டுக்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், "நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),

நூல்: புகாரி 5294

பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை

இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கட்டளை அமைந்துள்ளது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: புகாரி 6242

உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 6902

அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்கையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரையைத் தொங்க விடுதல்

இது வரை அடுத்தவர் வீட்டுக்குச் செல்பவருக்கான ஒழுங்கு முறைகளைக் கண்டோம். இவ்வாறு வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று வெளியில் இருப்பவர்கள் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.

ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.

பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)


இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும்.

மவ்லிது ஓதும் மவ்லவிகள்

கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது பெண்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள். இந்த வீடுகளில் பக்தி என்ற போர்வையில் மவ்லவி பெருமக்கள் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் வந்து மவ்லிது ஓதுவார்கள். பெண்கள் அந்நிய ஆணுடன் தனித்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 3006

பொதுவாக மவ்லிது ஓதுவது பாவம் என்பது ஒருபுறமிருக்க, நபி (ஸல்) அவர்களின் இந்தத் தடையைக் கூட மவ்லவிமார்களோ, அல்லது இந்தப் பெண்களோ பொருட்படுத்துவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். எனவே இந்த மவ்லவிமார்களுக்கும் பெண்கள் அனுமதியளிக்கக் கூடாது.

இவ்வாறு வீட்டில் இருப்போரும், அவர்களது வீட்டிற்கு வரும் அடுத்தவர்களும் அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய கட்டளைகளைப் பேணி நடக்க வேண்டும்.

(EGATHUVAM APR 2004)