Oct 26, 2016

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை

புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில் நின்று வணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான். ரமளானில் இரவு நேரத்தில் முந்திய பகுதிகளில் தொழும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தி, அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! ரமளான் மாதத்தில் விடாது கடைப்பிடிக்கும் இந்த இரவுத் தொழுகையை ரமளானுக்குப் பின்னரும் தொடர்வோமாக!

விலகி விடும் விலாப்புறங்கள்
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 32:16,17)

நரகத்திலிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப் பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!'' என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி 1121, 1122

பொறாமை கொள்ளத்தக்க அமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 5025

வல்ல இறைவனின் வானுலக வருகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1145

கேட்டது கிடைக்கும் நேரம்
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : முஸ்லிம் 1259

தொழுகையில் சிறந்தது
நோன்பில் ரமளானுக்குப் பிறகு சிறந்தது அல்லாஹ்வுடைய முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு தொழுகைகளில் சிறந்தது இரவுத் தொழுகையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1982

ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி),
நூல் : திர்மிதீ 2409

தொழத் தொடங்கியவர் விடலாகாது
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி),
நூல் : புகாரி 1152

ரமளானில் இரவுத் தொழுகை
யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 37

முற்றும்


(EGATHUVAM NOV 2003)