Oct 26, 2016

மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையே!

மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையே!

மவ்லிதுகளில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக் காட்டுவதென்றால் அதற்கு இந்த இதழின் பக்கங்கள் இடம் கொடாது. அதற்கென்று தனியாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த அபத்தங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் சுப்ஹான மவ்லிது, யாகுத்பா போன்ற நூல்களை வாங்கிப் பார்வையிடுக!

இந்த மவ்லிதுகள் இஸ்லாமிய அடிப்படையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியவை என்பதையும், இது யூதர்களால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் பரப்பி விடப்பட்டவை என்பதையும் இப்போது பார்ப்போம்.

ஜிப்ரீலை மட்டம் தட்டும் மவ்லிது

எல்லாம் வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு மாபெரும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அளித்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.

இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும். வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர். (அல்குர்ஆன்81:19-21)

அஷ்ஷுஃரா அத்தியாயத்தின் 193வது வசனத்தில் நம்பிக்கைக்குரிய உயிர் என்று நற்சான்று வழங்குகின்றான்.

அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்த போது, அவர்களுக்குத் தன்னுடைய அற்புதங்களைக் காட்டினான். அந்த வரிசையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கும் காட்சியை வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றான்.

அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.
(அல்குர்ஆன் 53:5-14)


இப்படி அல்லாஹ்வால் மிகவும் புகழ்ந்து பாராட்டப்படும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி மவ்லிது என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.

என்னை அச்சுறுத்தும் அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டால், தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! என் ஊன்றுகோலே! என்று நான் உங்களை அழைப்பேன். என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள். என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள். என்றென்றும் நிரந்தரமான திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அருளால் எனது குறைகளைக் காலா காலம் மறைத்து விடுங்கள்.
(சுப்ஹான மவ்லிது)


இவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி பாடியதாக சுப்ஹான மவ்லிதில் கூறபட்டுள்ளது.

மலக்குகளின் தலைவர், வலிமை மிக்கவர் என்று அல்லாஹ்வால் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களையே அச்சுறுத்தி அநீதி இழைத்திட மற்றவர்களால் முடியும் என்று இந்த மவ்லிது வரிகள் கூறுகின்றன.

மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்றும் குறைகள் உடையவர் என்றும் இந்த வரிகள் கூறுகின்றன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைப்பார்கள் என்று கூறினால் அவர்கள் கொண்டு வந்த வஹீயிலும் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி விடாதா?

இந்தத் தவறுகளையெல்லாம் விட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பாதுகாப்பு தேடுவதாகக் கூறுவது தான் இதில் வேதனையான விஷயம்.

மனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் கூட நபி (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கூறவில்லை. தன்னிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன்2:186)

அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த வசனத்தில் மக்களுக்கு அறிவிக்கச் சொல்கின்றான். மனிதர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட யாரிடமும் உதவி தேடக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் எனும் போது, இந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) 'அவர்களிடம் உதவி தேட வேண்டிய அவசியம் என்ன?

ஆக, ஜிப்ரீல் (அலை) அவர்களை பலவீனராகவும், தவறிழைக்கக் கூடியவராகவும் சித்தரித்து, அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததாகக் காட்டுவது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. மவ்லிதை இயற்றியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீதுள்ள வெறுப்பு இங்கு அம்பலமாகின்றது.

ஜிப்ரீல் (அலை) அவர்களை முஃமின்கள் யாரும் வெறுக்க முடியாது. அப்படி வெறுப்பவர் உண்மை முஃமினாக இருக்க முடியாது. யூதர்கள் தான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வெறுப்பார்கள். இதைப் புகாரியின் 4480வது ஹதீஸில் காணலாம். இதனால் தான் ஜிப்ரீலின் எதிரி தனக்கும் எதிரி என்று அல்லாஹ் தன் திருமறையில் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்2:98)


ஆக இந்த அளவுக்கு அல்லாஹ்வினால் அந்தஸ்தும் மரியாதையும் வழங்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களை இந்த மவ்லிதுகள் எவ்வளவு மட்டரகமாக நடத்துகின்றன என்பதைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையில் உருவான கைச்சரக்கு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டும் மவ்லிதுகள்

இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! இந்த அடிப்படைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் மவ்லிது வரிகள் யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெற்றுள்ளன.

முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானியைப் புகழ்ந்து பாடும் யாகுத்பா என்ற (மவ்லிது) கவிதை மாலையில் அப்துல் காதிர் ஜீலானிக்கு வஹீ வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கின்றீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே! (இறைவனாலேயே) மகத்தான இரட்சகரே! என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப் பட்டு விட்டீர்கள். (யாகுத்பா)


இந்த வரிகளில் இந்த மவ்லிதை இயற்றிய கவிஞன் சொல்ல வரும் விஷயங்கள் இவைதான்.

அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.

கவ்சுல் அஃலம் - மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை மனிதர்களாகச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவர்களுக்கு இதை வழங்கினான்.

அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுக்கு கலீபாவாக இருக்கிறார்.

இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவர்களை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களையும் இந்தக் கவிதை வரிகள் மறைமுகமாக அல்ல! நேரடியாகவே தெரிவிக்கின்றன.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியவையாக உள்ளன. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்ற கருத்தை சராசரி முஸ்லிமும் நம்பத் துணிய மாட்டான்.

நபிமார்களின் தொடரை நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் நிறைவு படுத்தி, ஹஜ்ஜத்துல் வதாவின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்திவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
(அல்குர்ஆன் 5:3)


நபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன் அல்லாஹ் பேச வேண்டும்? எதற்காக பேச வேண்டும்? அப்படிப் பேசுவதாக இருந்தால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தில் இருந்த, நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ் பேசியிருப்பான். ஆனால் அவ்வாறு பேசியதாக இந்த மவ்லிதை ஓதுபவர்கள் கூட ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினான் என்று நா கூசாமல் மவ்லிதுகளில் ஓதி வருகின்றனர். எனவே இது அல்லாஹ்வின் மீது சொல்லப்படும் அவதூறும் அபாண்டமும் ஆகும்.

இதேபோல் சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் பொய்யைப் பார்ப்போம்.

நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும் மலக்குகள் கெண்டியில் தண்ணீர், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்களால் பதிக்கப் பட்ட தட்டுகளையும் தாம்பூலங்களையும் சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் பளிங்கு போன்ற இதயத்தைக் கழுவி தூதுவர் என்று முத்திரையிடுகின்றார்கள்.

இந்நேரத்தில் ரஹ்மான் மலக்குகளை அழைத்து அவரைத் தூக்கிக் கொண்டு, அர்ஷ் மற்றும் விரிவான சுவனபதிகளை சுற்றி வலம் வாருங்கள் என்று சொன்னான்.

இதுதான் அந்தப் பொய்.

குழந்தையாக இருந்த நபி (ஸல்) அவர்களைத் தூக்கிக் கொண்டு சுவனபதியை, அர்ஷை சுற்றி வாருங்கள் என்று அர்ரஹ்மான் மலக்குகளை அழைத்துக் கூறிய நிகழ்ச்சி குர்ஆனில் இடம் பிடித்திருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றி கூறி, அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களில் பதியப் பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்திருந்தால் அதை நாம் அறிந்து கொள்ள இந்த இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

இது எங்கே வருகின்றது? இது அல்லாஹ்வின் மீது சொல்லப்படும் அபாண்டமல்லவா?

மிர்சா குலாம் தன்னை நபி என்று சொன்னவுடன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, பொங்கி எழுந்து, துள்ளிக் குதிக்கும் ஆலிம்கள் இந்தக் கவிஞன் சொல்லி விட்டுச் சென்றதை வீடு வீடாக பாடி, பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பது நியாயமாகுமா?

இதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மறுமையில் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? அல்லாஹ்வின் மீது அவன் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்வதற்கு எப்படித் துணிய முடிகின்றது?

இப்படிப் பொய் சொல்பவர்களுக்கெல்லாம் மிகக் கடுமையான தண்டனையை அல்லாஹ் தயார் படுத்தி வைத்திருக்கின்றான். இப்போது, இங்கு காட்டப்பட்ட அல்லாஹ்வின் மீதான பொய்கள், அவதூறுகள், அபாண்டங்கள், அவற்றுக்கான தண்டனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிக் கூறும் வசனங்கள் இதோ :

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்படாதிருந்தும் "எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், மற்றும் "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்).

அல்குர்ஆன் 6:93

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். "அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

அல்குர்ஆன் 7:37

இந்த இரண்டு வசனங்களையும் படிப்பவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆம்! அல்லாஹ் தன் மீது இல்லாத பொய்களை, பொல்லாத புனைச் சுருட்டுகளைக் கட்டி விடுபவர்களை அவர்களின் கதையை முடிக்கும் தருவாயிலேயே கணக்கு தீர்க்கின்றான். மரணப் படுக்கையிலேயே மலக்குகள் மூலமாக அவர்களது நெளிசலைக் கழற்றி விடுகின்றான். அதன் பின் மறுமையில் நரகத்தில் அவர்களைச் சுருட்டி வீசி விடுகின்றான். இதுபோன்ற ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன.

இவ்வளவு பெரிய பயங்கரமான விஷயத்தைத் தான் இந்த மவ்லிதுப் பிரியர்கள் மிக எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். அல்லாஹ் இதுபோன்ற விஷயங்களை விட்டும் இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காப்பானாக!

மவ்லிதும் ஷஃபாஅத்தும்

மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் ஷஃபாஅத் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த மவ்லிது ஓதுவதற்காக காசு பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாத்தின் முக்கியக் கடமையான ஜகாத்தை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய பொருளாதாரம் என்ற நீர்வளத்தை மவ்லிது என்ற வயல்களை நோக்கிப் பாய்ச்சுகின்றனர். இதற்கென்று தனி மரியாதைகளையும் மதிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. கடைந்தெடுக்கப்பட்ட பித்அத் ஆகும்.

இன்று ஏகத்துவச் சுடர் எங்கு பார்த்தாலும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. மவ்லிதுகளில் அடங்கியிருக்கும் விஷக் கருத்துக்கள், ஷிர்க்கான கவிதைகள், அமல்களைப் பாழாக்கி நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்று நம்முடைய ஏகத்துவ இதழ்கள், நூல்கள், ஒளி ஒலி நாடாக்கள் என விளக்கங்கள் வெள்ளங்களாகக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் ஒருவர் மவ்லிது ஓதுவாரானால் அவர் மாபெரும் நஷ்டத்திற்கும் கைசேதத்திற்கும் உரியவராவார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல்புரிவதாக நினைக்கின்றனர்.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை. (அல்குர்ஆன் 18:102-106)

அல்லாஹ் இந்த வசனங்களில் பட்டியலிடும் பண்புகளை நன்கு கூர்ந்து கவனியுங்கள்.

1. இந்த உலகில் அவர்களின் முயற்சி வீணாகுதல்


2. அவர்கள் அழகிய அமல்கள் செய்வதாக நினைத்தல்


3. இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களையும் அவனது சந்திப்பையும் நிராகரித்தல்.


4. அல்லாஹ்வின் வசனங்களையும் அவனது தூதர்களையும் கேலிப் பொருளாக்குதல்.


இந்த நான்கு பண்புகளுமே மவ்லிது ஓதக் கூடியவர்களிடம் பொருந்திப் போகின்றன.

1. மவ்லிது ஓதுபவர்கள் மவ்லிதுக்கு என்று பெரும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை முந்தைய தலைப்பில் பார்த்தோம். அதிகமான நேரத்தையும் செலவிடுகின்றனர். அவர்கள் இந்த நேரத்தை வேறு ஏதேனும் வேலைக்காக செலவழித்திருந்தால் அதற்குரிய பலன்களையாவது கண்டிருப்பார்கள். இதற்காக பெரும் பொருளாதாரத்தை செலவிடுகின்றார்கள். இதே பொருளாதாரத்தை வேறு வகையில் முதலீடு செய்திருந்தால் அது அவர்களுக்குப் பயனளிப்பதாக அமைந்திருக்கும். இந்த வகையில் மவ்லிது ஓதக்கூடியவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் நஷ்டமடைகின்றார்கள்.


2. இதற்கென்று பத்தி, பூ, சாம்பிராணி, நேர்ச்சை, சமையல், மேற்கட்டி, சந்தனம் தெளித்தல், இல்லறத்தைத் துறத்தல், மீன் சாப்பிடாமல் இருத்தல் என்று பெரும் உழைப்புகளைச் செய்கின்றார்கள். மாற்று மதத்தவர்கள், அலகு குத்தல், காவடி எடுத்தல் போன்ற உழைப்புகளை எப்படிச் செய்கின்றார்களோ அதே போல் இவர்களும் உழைப்புகளைச் செய்கின்றார்கள்.


இந்த உழைப்பை உலகத்தில் சம்பாதிப்பதற்காக செய்திருந்தால் பணமாவது கிடைத்திருக்கும். ஆனால் இவர்களோ இரண்டும் கெட்டான் நிலையில் ஆகி விடுகின்றனர். இந்த உழைப்பை எல்லாம் இவர்கள் செய்யும் ஒரே நோக்கம் இது ஒரு நல்லமல் என்று தான். இப்படி நல்லமல் என்று நினைத்து ஒரு காரியத்தைச் செய்து அதற்கான கூலியைப் பெறாமல் ஆகி விடுகின்றார்கள். இவர்களைத் தான் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

3. இத்தகையவர் அல்லாஹ்வுடைய சான்றுகளையும் அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள் ஆகின்றனர். மவ்லிது ஓதக் கூடியவர்கள், அல்லாஹ்வின் சான்றுகளை மறுக்கவா செய்கின்றார்கள் என்று கேட்கலாம்.


நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 18:110)


இந்த வசனத்தில் அல்லாஹ் என்னுடைய சந்திப்பை ஆதரவு வைப்போர் எனக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்று என்று தெரிவித்த பின்பும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விஷயங்களை, மவ்லிதின் கதாநாயகர்களான நபி (ஸல்) அவர்கள், அப்துல்காதிர் ஜீலானி போன்றவர்களிடம் கேட்பதன் மூலம் இணை வைக்கின்றார்கள். இதன் பொருள் என்ன? யா அல்லாஹ் உனது சந்திப்பு எனக்குத் தேவையில்லை என்று தானே பொருள்.

இதே காரியத்தைத் தான் இஸ்லாத்திற்கு வெளியே உள்ள இணை வைப்பாளர்கள் செய்கின்றனர். இதை இஸ்லாத்தில் இருந்து கொண்டு செய்தாலும் இதே விளைவு தான் ஏற்படும். அதைத் தான் மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. இந்த அடிப்படையில் அல்லாஹ் கூறும் இந்த மூன்றாவது பண்பிலும் மவ்லிது ஓதக் கூடியவர்கள் முழுக்க முழுக்க ஒத்துப் போகின்றார்கள்.

4. அல்லாஹ்வை மறுத்து அவனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக்குதல்.


கேலியாக்குதல் என்று சொன்ன மாத்திரத்தில் நாங்களா கிண்டல் செய்கிறோம் என்று ஆச்சரியமாகத் தான் கேட்பார்கள். ஆம்! உண்மையில் நன்கு தெரிந்து கொண்டே தான் கிண்டல் செய்கின்றார்கள். அது எப்படி?

இணை வைப்பதால் மறுமையில் நிரந்தர நரகம் என்று சொல்லும் போது அதை ஒத்துக் கொள்ள மறுப்பது அல்லாஹ்வை மறுப்பதற்குச் சமம்! இந்த வகையில் அல்லாஹ்வை மறுக்கின்றார்கள்.

ஒருவன் நமக்கு முன்னால் பீடி புகைக்கின்றான். அவனைப் பார்த்து நீ பீடி புகைக்காதே! என்று சொல்லும் போது அந்த இடத்திலேயே அவன் பீடியை அணைத்து விட்டான் என்றால் நம்முடைய அந்தச் சொல்லுக்கு மரியாதை இருக்கின்றது என்று விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறன்றி நமக்கு முன்னே மீண்டும் பீடி புகைக்கின்றான் என்றால் அவன் நம்மைக் கேலிப் பொருளாக்கி விட்டான் என்று தான் அர்த்தம்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

இந்த வசனத்தின் அடிப்படையில் நீங்கள் அல்லாஹ்விடமே கேளுங்கள் என்று சொன்னால், நான் நபி (ஸல்) அவர்களிடம் தான் என் தேவைகளைக் கேட்பேன் என்று மீண்டும் மீண்டும் ஷிர்க்கான வரிகள் இடம் பெறும் மவ்லிதுகளை ஓதுவதன் அர்த்தம் என்ன? அல்லாஹ்வுடைய கட்டளையைக் கிண்டல் செய்வதைத் தவிர்த்து இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

மவ்லிது ஓதக் கூடாது என்பதற்கும், இது பித்அத் என்பதற்கும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஹதீஸ்களைச் சொல்லி மவ்லிது ஓத வேண்டாம் என்று சொன்னால், நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது? நான் எப்போதும் மவ்லிது ஓதத் தான் செய்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிண்டல் செய்வது தான்.

இந்தக் காரியத்தையும் மவ்லிது ஓதும் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் இறை நிராகரிப்பாளர்களைப் போன்று இம்மை மறுமை ஆகிய இரண்டையுமே இழந்து இரண்டும் கெட்டான்களாகி விடுகின்றார்கள். இந்த வகையில் இது மாபெரும் நஷ்டமாகும். இந்த பண்புகள் இருந்தால் அவர்களுக்கு நரகமே தண்டனை என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். எனவே இந்தப் பெரும் பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

பாடல்களைப் பாடி வழிபடுதல்

பாடல்களைப் பாடி அதன் மூலம் கடவுளை எழுப்பி வழிபடுவதென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதுபோல் கிறித்தவர்களும் பாட்டுப் பாடி தான் கடவுளை வழி படுவர். இதுபோன்று பாட்டுப் பாடி வழிபடல், வணங்குதல் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆனால் இந்த மவ்லிதுவாதிகளோ மவ்லிது என்ற பெயரில் புதுப்புது மெட்டுக்களில் பாட்டுப் பாடி அதை வணக்கம் என்று நினைக்கின்றனர். இதன் மூலம் மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்களாகி விடுகின்றனர்.

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகி விடுகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது போன்று (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத் 3512) மவ்லிது ஓதுவதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒப்பாகி விடுகின்றனர். மேலும் இஸ்லாத்தில் ஒரு புது வணக்கத்தைப் புகுத்தியவர்களாக, அதாவது பித்அத்தைச் செய்தவர்களாக ஆகின்றனர்.

பித்அத்தும் பறிக்கப்படும் ஷஃபாஅத்தும்

மவ்லிது ஓதினால் மாநபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் (பரிந்துரை) கிடைக்கும் என்று மக்கள் பெருமளவில் நம்புகின்றார்கள். அவர்கள் இந்த நம்பிக்கையைப் புரிந்து கொண்டு மவ்லவிமார்களும் மவ்லிது ஓதினால் மறுமையில் ஷஃபாஅத் கிடைக்கும் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.

ஆனால் உண்மையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்காது. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் பித்அத்துகளைப் புகுத்தி, மாற்றங்களைச் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் அடக்கத்தலத்திற்கு வந்து, "இறை நம்பிக்கை கொண்ட கூட்டத்தின் இல்லத்தாரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவோம் (என்று கூறி) நிச்சயமாக நான் நம்முடைய சகோதரர்களை உலகிலேயே கண்டு கொள்ள விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் கிடையாதா'' என்று நபித் தோழர்கள் கேட்டனர். "இன்னும் (உலகில்) உருவாகவில்லையே அவர்கள் தான் நம்முடைய சகோதரர்கள் என்கிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். உங்களுடைய சமுதாயத்தில் இன்னும் உருவாகாதவர்களை (மறுமையில்) நீங்கள் எப்படித் தெரிந்து கொள்வீர்கள் என்று நபித் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கன்னங்கருத்த குதிரைகளுக்கிடையில் முகத்திலும் கால்களிலும் வெள்ளை நிறத்தைக் கொண்ட குதிரை ஒருவருக்கு இருந்தால் அவர் அக்குதிரையை தெரிந்து கொள்ள மாட்டாரா?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.


நபித் தோழர்கள், "ஆம்! கண்டு கொள்வார்'' என்று பதில் கூறினார்கள். நிச்சயமாக அந்தச் சகோதரர்கள் உளூவின் காரணமாக முகம் கைகளில் வெண்சுடர் வீச வருவர் (இதன் மூலம் அவர்களை நான் தெரிந்து கொள்வேன்) நான் உங்களுக்கு முன்னதாக நீர் தடாகத்திற்கு வந்து விடுவேன். அறிந்து கொள்ளுங்கள். வழி தடுமாறி வந்த ஒட்டகம் விரட்டப்படுவது போன்று, என்னுடைய தடாகத்தை விட்டும் மக்கள் விரட்டப்படுவர். வாருங்கள் என்று அவர்களை நான் கூப்பிடுவேன். அப்போது, "இவர்கள் உங்களுக்குப் பின்னால் மார்க்கத்தை மாற்றி விட்டார்கள்'' என்று என்னிடம் தெரிவிக்கப்படும். தொலையட்டும்! தொலையட்டும்! என்று நான் கூறி விடுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 367

பாருங்கள்! மார்க்கத்தில் மவ்லிது போன்ற புதுமையைப் புகுத்தியவர்கள் வழிதடுமாறி வந்த ஒட்டகங்கள் போல் தடாகத்திலிருந்து துரத்தியடிக்கப் படுகின்றார்கள். இப்படி துரத்தியடிக்கப் படுபவர்களுக்கு எப்படி ஷஃபாஅத் கிடைக்கும்? லஃனத் - சாபம் தான் கிடைக்கும். அதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தான் காரியங்களில் மிகவும் கெட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: முஸ்லிம் 1435

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் தான் மிகக் கெட்ட காரியங்களாகும். இந்தக் காரியங்கள் அனைத்துமே வழிகேடுகள். அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

மவ்லிது ஓதுவது நன்மையைப் பெற்றுத் தராது என்பது ஒருபுறமிருக்க நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மிகப் பெரும் பாவமாகவும் அமைந்துள்ளது.

மதம் மாறியவர்கள்

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்! அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களையே கடவுளாகச் சித்தரித்து இயற்றப்பட்ட கவிதைகள் இந்த மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ளன.

எப்படி ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் கடவுளாக ஆக்கப்பட்டார்களோ, அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை விட்டு எவ்வாறு அம்மக்கள் வெளியேறினார்களோ அதுபோல் முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களைப் புகழ்கின்றேன் என்ற பெயரில் மவ்லிதுகள் மூலம் நபி (ஸல்) அவர்களையும் கடவுளாக ஆக்கி இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டார்கள். அதாவது மதம் மாறி விட்டார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தனது பாதையை விட்டும் மாறிச் சென்ற தனது சமுதாயத்திற்கு எதிராக சாட்சி சொல்வது போல் இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் சாட்சியமளிக்கின்றார்கள். இதன் மூலம் இடது பக்கம் இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள். இதையே பின்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.

நீங்கள் (மறுமை நாளில்) செருப்பு அணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் முதன்முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) ஆவார்கள். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள், இவர்கள் என் தோழர்கள்'' என்று கூறுவேன். அப்போது, "நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தங்கள் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது நல்லடியார் (ஈஸா நபியவர்கள்) கூறியதைப் போல், "நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனும் (5:117, 118) இறைவசனத்தைக் கூறுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 3349

எனவே இந்த மவ்லிது என்ற பித்அத் மூலம் ஷஃபாஅத்தை இழந்து சாபத்தை அடைவதுடன் நிரந்தர நரகத்திற்குரியவர்களான இடது பக்கவாசிகளுடன் சேர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகின்றது. எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் மட்டும் வணங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

(EGATHUVAM MAY 2004)