Jul 27, 2015

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்

மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.

கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு கொள்வது கிடையாது. வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும் ஏவுவார்கள். எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வர மாட்டார்கள்.

தீமையைத் தடுப்பது சாதாரண பணியல்ல. கை கால்களைப் பதம் பார்க்கக் கூடிய, கண்ணீரையும் செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதை, செய்து பார்த்தால் தான் தெரியும். அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக் குறிப்பிடும் போது, நன்மையை மட்டும் ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான்.
(பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71)

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாது. அதே சமயம் இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது தான் மக்கள் கொந்தளிக்கின்றார்கள். திட்டுவதற்கு மட்டுமல்ல, வெட்டுவதற்கும் முன் வருகின்றார்கள். எனவே தீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணி. இதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள். இது இவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும்.

அடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(?). அது தான் இவர்களால் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும். இதற்கு இவர்கள் திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்ல வேண்டியுள்ளது.

இவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்என்று சொன்னால் போதும். இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். முகம் அனல் பிழம்பாகி விடும். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள். ஜக்கரியா மவ்லானா போன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம். ஆனால் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம்.

இதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழி பெயர்ப்பை வாசித்து விட்டால், இனிமேல் பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக் கூடாது என்று தடை விதிப்பார்கள். இந்தக் கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
(அல் குர்ஆன் 74-49,50,51)

என்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம். அதே சமயம் இந்தக் கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக் காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இது என்ன நியாயம்?

இது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும். புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம். இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காது. எனவே இந்த தப்லீக் இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும்.

இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட, நபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான இதாரா இன்ஷாஅத் இ தீனிய்யாஎன்ற பதிப்பகத்தின் உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை, குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார். இனி இது போன்ற தஃலீம் தொகுப்புகளை அச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார்.

இது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்கு வர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. குர்ஆன், ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்த்து, பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன்
முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி

தப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்ட போது அவர் தெரிவித்ததாவது-

மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான் நாடினேன். இவ்வாறு நாடுவதற்குக் காரணம், ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்ட நூல்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனது கருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான் காணவில்லை.

அதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போது, ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன். இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன். இதனால் இப்போது என்னைச் சுற்றி இருப்பவர்களால், குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில் வார்க்கப்பட்டவர்களால், நான் ஒரு மாபெரும் பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகின்றேன்.

நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தது தான் அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்தவித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தவில்லை. என்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை. இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியது. ஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடைய மருமகளை அழைத்து வந்தேன். ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. இவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒரு ஹிஜாபைப் பின்பற்றாமல் இருந்து விட்டோம்? என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்து மார்க்க அடிப்படையில் கணவனுடைய சகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம்.

பேட்டியாளர் : குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

முஹம்மது அனஸ் : அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ் அதாவுல்லாஹ் தர்வி, ஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரி, ஷைஹ் மிஃராஜ் ரப்பானி, ஷைஹ் பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின் பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதிய, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் வெளியீடான) அஃமாலே குர்ஆனிஎன்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ் ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை* அஃமாலே குர்ஆனி நூலில் பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். அந்த நூலை விற்கக் கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன். இது போன்று ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்தி விட்டேன்.

அஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும் செய்தி இது தான்.

ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்து ஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும், மற்றொன்றை இடது தொடையிலும், இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்

பேட்டியாளர் : அஹ்லே ஹதீசுக்கு வந்த பிறகு, நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர் கொள்கின்றீர்களா?

-அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்

ஏகத்துவம் ஜூன் 2003